கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சூளகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட இருசக்கர வாகனத்தில் சூளகிரி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மினி சரக்கு வாகனம், பிரபு வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிரபுவிற்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், கரோனா தடுப்பு பணியின் போது விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!