கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதூர்க்கம் வனப்பகுதியிலிருந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு ஆண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் சுற்றி வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களைச் சேதம் செய்தும் வருகின்றனர். இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் கிருஷ்ணகிரி சுற்றுப்புறங்களான சோக்காடி வெங்கடாபுரம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி போன்ற இடங்களில் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 காட்டு யானைகளையும் மேல்மலை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில் இன்று விரட்டப்பட்ட 3 காட்டு யானைகள், அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் கிருஷ்ணகிரி, பாலகுறி பெல்லாரப்பள்ளி இடையே உள்ள ஏரியில் இன்று காலை முகாமிட்டு ஏரி தண்ணீரில் உற்சாகமாக விளையாடிக் குளித்து வருகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து விரைந்து சென்ற வனத்துறையினர் தற்போது யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மீண்டும் கிராமப் பகுதி அருகே யானைகள் வந்துள்ளதால் பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை மீண்டும் வனப் பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை