கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா பாலதொட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. நேற்று மேய்ச்சலுக்குப் போன இவரின் மாடு வீடு திரும்பவில்லை என்பதால், அதனை தேடி இன்று அதிகாலை காட்டுக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் உப்புராண்ப்பள்ளி என்ற இடத்திலுள்ள புளியந்தோப்பில் உயிரற்றுக் கிடப்பதாக திம்மராயப்பாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உறவினர்கள், இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் திம்மராயப்பன் யானை தாக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். யானை தாக்கி முதியவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையோர கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் பலி!