தமிழ்நாட்டிலேயே நீண்டநாள்களாக எவ்வித கரோனா பாதிப்பும் இல்லாத பச்சை மண்டலமாக நீடித்துவந்த கிருஷ்ணகிரி மாவட்டமானது கோயம்பேடு சந்தை தொடர்பு காரணமாக சூளகிரி காமராஜ் நகரில் உள்ள 18 பேருக்கு கோவிட்-19 உறுதியானது. மேலும், மும்பையிலிருந்து ஓசூருக்கு திரும்பிய இரண்டு பேர் என மொத்தம் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அனைவருக்கும் ஓசூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், 20 பேரில் இன்று ஒரேநாளில் சூளகிரியைச் சேர்ந்த 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 15 நாள்களுக்குத் தேவையான கபசுரக்குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், காய்கறிகள், பழ வகைகள் வழங்கப்பட்டன. மேலும், பூங்கொத்து வழங்கி மருத்துவக்குழுவினர் கைத்தட்டி 18 பேரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பிவைத்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 20 பேரில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 11 பெண்கள், 6 ஆண்கள் என 18 பேர் வீடு திரும்பி இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே வேளையில் மும்பையிலிருந்து வந்த இரண்டு பேருக்கு மட்டும் கரோனா பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆரஞ்சு மண்டலத்திலிருந்து மீண்டும் பச்சை மண்டலத்திற்கு திரும்புவதால் கரோனா தொடர்பான அச்சம் படிப்படியாகக் குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்புகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் மொத்தம் 67 பேர் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் படிப்படியாக பலர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பேரும் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததால், இன்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அந்த மூன்று பேரையும் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார்.

தற்போது திருச்சியைச் சேர்ந்த 3 பேர், பெரம்பலூரைச் சேர்ந்த 14 பேர், அரியலூரைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 19 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அனைவரும் நலமுடன் இருப்பதாகத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடம்பாக்கத்திலும் 1,000ஐ தாண்டிய கரோனா பாதிப்பு!