கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்கு உள்பட்ட முள்ளிபாடி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம்பிள்ளை - மீனாம்பாள் தம்பதியரின் மகன் நாகராஜ் (வயது 25). இவர் அப்பகுதியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இச்சூழலில் சில மாதங்களாக இவர் வயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டு வந்ததால், இவருடைய திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த நாகராஜ், ஊரின் புளியமரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவ்வழியாக சென்ற பொது மக்கள் நாகராஜின் உடலைக் கண்டறிந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், பாலவிடுதி காவல் துறையினர் வந்து அவரது உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.