கரூரில் மார்ச் 8ஆம் தேதி மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று (மார்ச்8) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் மணிமேகலை ஈடிவி பாரத்க்கு பிரத்தியோக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும்என்பதை மகளிர் தினத்தில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் காவல்துறை அலுவலர்களுக்கு பாதுகாப்பில்லை.
பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுக்கப்பட தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்துப் பிரிவு மாணவிகளுக்கும் கல்வி இடை நிற்றல் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் கல்வி உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்போது தமிழ்நாடு அரசு வழங்கி வரும் உதவித்தொகை ரூ.500க்கு குறைவாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் இதனை அதிகரித்து வழங்க வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றுக்கு நிதியை தமிழ்நாடு அரசு அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் பெண் குழந்தைகள் ரத்தசோகை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: செவிலியர் கல்லூரியை திறக்கக் கோரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்!