கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சிவகாமசுந்தரி நேற்று (மார்ச் 24) பரப்புரையில் ஈடுபட்டார். கருப்பம்பாளையம், பள்ளப்பாளையம், அப்பிபாளையம், பழைய சுக்காலியூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பரப்புரையில் அவர் பேசுகையில், “கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தொகுதி பக்கமே வரவில்லை. எங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை எனப் பெரும்பாலான மக்கள் என்னிடம் முறையிட்டனர். நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மாதமும் கிராம ஊராட்சிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவேன்.
பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை, 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். நான் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நூறு நாள்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும். கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் ஒத்துழைப்போடு உங்கள் கோரிக்கைகளை நானே முன்னின்று நிறைவேற்றித் தருவேன்” என்றார்.
இதையும் படிங்க : என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்- உத்தவ் தாக்கரேவுக்கு, அனில் தேஷ்முக் கடிதம்!