கரூர்: கரூர் நகராட்சிக்குள்பட்ட படிக்கட்டு துறை, காந்திநகர் நகர் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
பின்னர், மின்சாரக் கட்டணம் செலுத்த இன்றே (ஜூன் 15) கடைசி நாள் என்பதால் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த காரணத்தினால் கால அவகாசம் வழங்கப்பட்டது.
போதும் அவகாசம்
தற்பொழுது படிப்படியாக தொற்று எண்ணிக்கைக் குறைந்து, தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 11 மாவட்டங்களில் 25 விழுக்காடு பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, தளர்வுகள் அறிவிப்பால் மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான, கூடுதலான கால அவகாசத்தை நீட்டிக்கத் தேவை ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்பு: ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!