கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அட்னன், கேசவன் மற்றும் அருண். அறிவியல் மீதான தீராத காதலால் பள்ளியில் படிக்கும்போதே இவர்கள் தங்களுடைய முயற்சியில் முதல் செயற்கைக்கோளை உருவாக்கினர்.
வலுவூட்டப்பட்ட கிராபோன் பாலிமர் என்ற மெட்டீரியல் மூலம் 64 கிராம் எடை மற்றும் 3 சென்டி மீட்டர் சுற்றளவில் வடிவமைக்கப்பட்ட இந்த சாட்டிலைட்டிற்கு 'இந்தியன் சார்ட்' என பெயரிடப்பட்டது. 13 வகையான தகவல்களை கண்டறியும் தன்மை கொண்ட இது, சோலார் சக்தியில் 3.3 வோல்ட் திறனில் இயங்க கூடியதாகும்.
ஐஎன்சி (INC) என்ற நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 'கியூப் இன் ஸ்பேஸ்' என்ற போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களின் செயற்கைகோள் நாசா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும்.
உலகளவில் நடைபெறும் இந்தப் போட்டியில், 73க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் பங்கேற்பார்கள்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் 12ஆம் வகுப்பு படிக்கும்போதே இப்போட்டியில் முதல்முறையாக கலந்துகொண்டனர். இருப்பினும், எவ்வித அனுபவமுமின்றி கலந்துகொண்டதால் போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
தோல்வியே வெற்றியின் அடிக்கல் என்பதை தெளிவாக உணர்ந்த மாணவர்கள், விடாமுயற்சியுடன் புதிய செயற்கைக்கோளை உருவாக்கும் ஆராய்ச்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஈடுபடத் தொடங்கினர்.
அதன்படி, 2019-20 நாசாவின் போட்டியில் கரூர் மாணவர்கள் உருவாக்கியுள்ள செயற்கைகோள் தேர்வானது. இதனால் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்தச் சாதனை செயற்கைக்கோள், நாசாவால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் SR-7 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது.
இதுகுறித்து மாணவன் அட்னன் கூறுகையில், "நமது தமிழகத்திற்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த செயற்கைகோளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதற்கு எங்களுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவானது. ஆனால், எங்கள் முயற்சிக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டால், உலகிலேயே மிகச் சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள் என்ற சிறப்பை பெறும். கிராமத்தில் உள்ள மாணவர்களாலும் முயற்சி செய்தால் பெரும் சாதனையை படைக்கமுடியும் என்பதற்கு இந்த மூன்று மாணவர்களின் சாதனையே ஒரு எடுத்துக்காட்டு.
மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை சிவகாமி, "முதலில் நிதி உதவி இல்லாமல் சிரமப்பட்டாலும் தற்பொழுது செயற்கைக்கோள் தேர்வாகி இருப்பது அரசு கல்லூரிக்கு மிகப்பெரிய பெருமை. செயற்கைக்கோளை தயாரிக்க தேவையான பொருள்களை மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வாங்கினார்கள். இதனால் தேவையற்ற காலதாமதமும் செலவும் ஏற்பட்டது.
கல்லூரி கல்வி இயக்குநரிடம் நிதியுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. நாசாவுக்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும்வரை கூடுதல் நிதி தேவைப்படலாம். எனவே, அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
அறிவியல் துறையில் அரசடிக்க வைக்கும் சாதனைகளை படைக்கும் இதுபோன்ற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, இவர்களைப்போல் அறிவியலில் அதீத ஈடுபாடுள்ள மாணவர்களை அரசு இனம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: களைகட்டிய நவராத்திரி: மந்தமாக இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனை!