கரூர்: சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன் (28).
இந்நிலையில், இன்று (நவ.8) மாலை இவர் மதுபோதையில் காரை வேகமாக இயக்கியதில் காளியப்பனூர், நீதிமன்றம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் மீது மோதினார்.
நீதிமன்ற பேருந்து நிறுத்தம் தாண்டி காரில் இவர் சென்றபோது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தாந்தோன்றிமலை காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் காவலர்களையும், பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதுமட்டுமின்றி அவர் தனது சட்டையை கழட்டிவிட்டு அரைநிர்வாணமாக நடுரோட்டில் வாகனங்களை மறித்துள்ளார்.
நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் காவலர் ஒருவர் இப்படி செய்தது, காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!