நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பிறமாநில தொழிலாளர்களின் நலன் கருதி அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் முதல் கட்டமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 254 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது அனைவரையும் தகுந்த இடைவெளியுடன் நிற்க வைத்து கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து முகக்கவசம் வழங்கி கரோனா பரவாமல் தற்காத்துக் கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுரை கூறினார்.
பின்னர் அவர்களை ஏழு பேருந்துகள் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள்