கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக குளித்தலையைச் சேர்ந்த நபர் மார்ச் 30ஆம் முதலாவது ஆளாக அனுமதிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், தோகைமலை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் 42 நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 41 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்த நிலையில், கரூர் அடுத்த தோகைமலையைச் சேர்ந்த 35 வயதான பெண் கடந்த 17ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 14 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் பூரணமாக குணமடைந்து இன்று 42ஆவது நபரும் வீடு திரும்பினார். இதனையடுத்து கரூர் மாவட்டம் கரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது.
உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பும் பெண்ணை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பழங்கள் வழங்கி கை தட்டி வழி அனுப்பி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுடன் 181 பேரும், அச்சம் காரணமாக 119 நபர்கள் என மொத்தம் 300 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். சிறப்பான மருத்துவ சிகிச்சையின் காரணமாக இதுவரை 286 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதில் பிறந்த குழந்தை முதல் 95 வயது முதியவர் வரை அடங்கும்.
தற்போது கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 41 நபர்களும் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒரு பெண் மட்டும் கடைசியாக வீடு திரும்பியுள்ளார். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை" என்றார்.
இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா பரிசோதனை சாத்தியமா?