கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, அவரது ஆதராவளர்களின் வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகே உள்ள டெக்ஸ் யார்டு இன்டர்நேஷனல் எனும் நிறுவனம், முருகன் அண்ட் கோ டைல்ஸ் நிறுவனம், 80 அடி சாலையில் இயங்கிவரும் வரும் குளோபல் பைனான்ஸ் அண்ட் பேக்ஸ், மூன்றுக்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவனங்கள், ராம்நகர் யுனைட்டட் எக்ஸ்போர்ட், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.
50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் கணக்கில் வராத 7 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு உரிமையானது என்றும் கூறப்படுகிறது. கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று (மார்ச் 26) திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் இரவில் தொடரும் இந்த வருமான வரி சோதனையால் பரபரப்பு நிலவுகிறது.