தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருவதை ஒட்டி, கரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மார்ச் 30, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் தாராபுரம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 31ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
ஏப்ரல் 1ஆம் தேதி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.
மேலும் காரைக்குடி, மொடக்குறிச்சி, விளவங்கோடு ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
கரூர் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத்தொகுதி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு இளம் வளரும் தலைவர். தற்பொழுது அவருக்கு மக்கள் மனதில் ஒரு இடம் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் நிச்சயம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரகாசமாக வெற்றி பெறுவார். அவருடைய பரப்புரையை பொறுத்துக் கொள்ள முடியாமல், பள்ளபட்டியில் உள்ள சிலர் மிரட்டல் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். பிரச்னையை செய்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனால் கல்வித்துறை காவித்துறையாக மாறியுள்ளது: மு.க.ஸ்டாலின் விமர்சனம்