ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலக எலும்புப்புரை தினமானது உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த எலும்புப்புரையானது வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாட்டினால் ஏற்படுவதாகும்.
இந்நிலையில், இன்று (அக்.20) கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எலும்புப்புரை தினத்தை முன்னிட்டு ’வளமான முதுமைக்கு வலுவான எலும்புகள் தேவை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் கலந்து கொண்டு, எலும்புப்புரை ஏற்படாமல் இருக்க முறையான உடற்பயிற்சியுடன், கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்பு, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி அதன் வெளிப்பகுதிகளில் சென்று விட்டு, மீண்டும் மருத்துவக் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் எலும்புப்புரை, கால்சியம் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் அப்பகுதியில் முக்கிய வீதிகளுக்கு பேரணியாக சென்றனர்.
இதையும் படிங்க: தனியார் சிகிச்சையகத்தின் மருத்துவர்களுக்கு அபராதம்