கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ. 1.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கர்ப்பிணி பெண்களின் கருவிலுள்ள சிசுக்கள் நன்கு வளரவேண்டுமென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சிறப்பான பல்வேறு நல்ல திட்டங்களைத் தீட்டி வருகின்றார்.
தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலம் . இதனை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். பெண்கள் சுயமாக தொழில்களை மேற்கொள்ள ஆடு, மாடுகளை ஜெயலலிதா கொடுத்தார் . ஆனால், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாட்டுக்கோழிகளையும் கொடுத்து ஊக்குவித்து வருகின்றார்' என்றார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ‘15 ஆண்டுகளுக்கான பணிகளை ஒரே ஆண்டில் முடித்திருக்கிறோம்’