சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமம், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய சிறப்புமிக்க அம்சங்களைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(அக்.11) ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தடை உத்தரவு சுற்றுலாத்தலங்களில் நீடித்து வருவதால், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபங்களும் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், கடற்கரைச் சாலை, கடற்கரைப் பகுதிகளில் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்துச் சென்றனர்.
கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப்பிறகு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.