தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாக்குமரி மாவட்ட வெள்ளச் சேதம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையினால் விவசாய நிலங்கள், தென்னை, வாழை, நெல் போன்ற பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கடந்த ஆட்சியில் போலல்லாமல், இந்த அரசு தேவையான உதவிகளைச் செய்யும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களைப் பாதிக்காத அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 650 ஹெக்டேர் பரப்பில் வாழை சேதமடைந்துள்ளன. இதுதவிர நெல் மற்றும் இதர பயிர்களும் சேதமடைந்துள்ளன. பயிர்ச் சேதம் பற்றிய கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் அரசுக்கு இது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவு வந்த போதிலும் அதனை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணித்து தேவையான அளவு தண்ணீரை வெளியேற்றி பெரும் சேதத்தை தவிர்த்து உள்ளது" என்றார். மேலும், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:யாஸ் புயல் தாக்கம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி மாவட்ட கிராமங்கள்!