கன்னியாகுமரி மாவட்டம், சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா இன்று காலை (ஜன.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடைதிறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் தலைமைப்பதி நிர்வாகி குரு பாலஜனாதிபதி கொடியை ஏற்றினார். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளாவிலிருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா நாள்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடைபெறும். 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்ன தர்மம் நடக்கும். 27ஆம் தேதி பகல் 12 மணிக்குத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமைப்பதி நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கலன்று மட்டுமே பகலில் திறக்கப்படும் கோயில்!