கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணி அடிமை, ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஜெபா, வாணிய குடியைச் சேர்ந்த கௌதம், சின்னவிளையை சேர்ந்த ஜார்ஜ், ராமநாதபுரத்தை சேர்ந்த காளி, மணி, மாரி செல்வம் உள்ளிட்ட 8 மீனவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது அவர்கள் ஈரான் கடல் பகுதியில் அத்துமீறி வந்து மீன்பிடித்ததாகக் கூறி எட்டு பெயரையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளனர். பின் அவர்களை அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
இவர்கள் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் 13 மீனவர்கள் ஏற்கனவே ஈரான் சிறையில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். இப்போது இந்த 21 மீனவர்களின் குடும்பத்தினர் தற்போது எந்தவித உதவியும் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் சார்பாக நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.