குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (58). இவர் பல வீடுகளுக்குச் சென்று படுக்கையில் உள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டுவந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டுவந்துள்ளார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாத இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்தார்.
இந்நிலையில் இன்று (நவ.07) மதியம் வரை இவர் வீட்டிலிருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளார். அவரது முகத்தில் ரத்தம் தோய்ந்த தலையணை காணப்பட்டதோடு கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் தலையணையால் முகத்தில் அழுத்தப்பட்டு சத்தம் வெளியே வராத வகையில் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் ஏஞ்சல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.