கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நிலப்பாறை பகுதியில் திருமூல நகர் உள்ளது. நெல்லை மாவட்டத்திலிருந்து கருங்கற்களை லாரிகளில் ஏற்றி, இப்பகுதி வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படுகிறது. அதிக அளவில் கனரக லாரிகள், அந்த வழியாகச் செல்வதால் வீடுகள் குலுங்குவதாகவும், வீட்டுச் சுவர்களில் கீறல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகவே, இன்று அவ்வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட அலுவலர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம்: கோவையில் கடையடைப்பு