சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காக 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் கன்னியாகுமரியில் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரானது ராட்சத குழாய் மூலம் நேரடியாக கடலுக்குள் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கழிவு நீர் கடலுக்குள் செல்வதால், கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மீனவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டு திடீரென முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை , பேரூராட்சித்துறை, காவல்துறை அலுவலர்கள், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கழிவுநீர் கடலில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சாலையில் நிரம்பி வழியும் கழிவுநீர் - துர்நாற்றத்தால் மக்கள் அவதி