கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்டமாக ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆயிரத்து 201 பதவிகளுக்கு மூன்றாயிரத்து 590 பேர் போட்டியிட்டனர்.
இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவானது, 476 வாக்குச்சாவடி மையங்களில் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட 114 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்திய அலுவலர்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதுபோன்று, வாக்குச் சீட்டு முறையில் பதிவான வாக்குகளின் பெட்டிகளில் சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 476 வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 64.34 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி
இதேபோல், தூத்துக்குடியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இன்று மாலை ஐந்து மணியுடன் வாக்குப் பதிவு நிறைவுபெற்ற நிலையில், 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
ஐந்து மணிக்கு பின்னரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடாக டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவுபெற்ற மையங்களில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவுபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: 'அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்