அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின்படி ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது 110ஆவது விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி, கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும்.
ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டத்தை லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட கடலோர கிராமமான ஆரோக்கியபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் - நிலோபர் கபீல்