கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மிஷின் காம்பௌண்ட் பகுதியைச் சேர்ந்தவர் அன்புகுமார். இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு நிகில் (22) என்ற மகன் இருந்தார். மேலும் ஸ்ரீஜா என்ற மகள் உள்ளார். வனஜாவிற்கு உடல்நிலை சுகமில்லை என்பதால், அன்புக்குமார் இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அவர் மகன் நிகில், மகள் ஸ்ரீஜாவுக்குச் சொந்தமானச் சொத்தை இரண்டாவது மனைவி சரோஜாவுக்கு கிரயம் செய்து கொடுத்ததாகப் கூறப்படுகிறது. இந்நிலையில், நிகில் திடீரென உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதையடுத்து, நிகிலின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் அன்புகுமாரின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனை அறிந்த அன்புகுமார், சரோஜா ஆகியோர் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரது வீட்டின் இரும்பு வாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று உடலை வைக்க முற்பட்டனர். இதையறிந்து அங்கு வந்த அன்புகுமாரும், சரோஜாவும் நிகிலின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான காவலர்கள் இரு தரப்பினரினரையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு சொந்தமானத் தோப்பில் நிகிலின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:இலவசமாக முகக்கவசம் வழங்கிவரும் காய்கறி வியாபாரி