உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக திகழ்வது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி. இங்கு கடலில் சூரியன் உதிப்பது, மறைவதைக் காணவும், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம் உள்ளிட்டவைகளை கண்டு ரசிக்கவும், பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவும் உள்ளூர் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குமரிக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இன்று வார விடுமுறை தினத்தையொட்டி உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் கடலில் சூரியன் உதயமாகும் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை சுற்றுலா படகில் சென்று ஆனந்தமாக கண்டு களித்ததோடு நீண்ட வரிசையில் நின்று பகவதி அம்மனையும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின், கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடைகளுக்குச் சென்று தங்களுக்கு தேவையான கடற் பாசிகள், சங்குகள், மாலைகள், வீட்டு அலங்கார பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். இதேபோல், முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், கோவளம் சன் செட் பாயிண்ட் கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐய்யப்ப பக்தர்களின் கூட்டம் இன்று வழக்கத்தை விட மிக அதிகமாகவே காணப்பட்டது.
கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வந்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகக் குறைந்திருந்த நிலையில் இன்று மழை நின்றுள்ளதால் குமரி சுற்றுலா தலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் துறை விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!