கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் வட்டாரத்தைச் சேர்ந்த மீன்பிடி கிராமங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் வல்லங்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன.
கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, கடற்பகுதியில் பலத்த காற்றும், மழையும் பெய்து வருவதால் மீன்கள் மிகக் குறைந்த அளவே கிடைப்பதால், மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதியில் வழக்கமாக ஒரு கட்டுமரத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள மீன்கள் வலைகளில் கிடைக்கும் நிலையில், தற்போது சுமார் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெல்லி வகை சிறு சிறு மீன்கள், மீன் வலைகளை சூழ்வதால் பெரிய வகை மீன்கள் கிடைக்கவில்லை என்றும்; ஜெல்லி மீன்கள் தங்களது தொழிலுக்குத் தற்போது இடையூறாக மாறியுள்ளதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதியில் மீன்கள் குறைவாக கிடைப்பதால் தற்போது மீன்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.