குமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதேபோல் பாசன கால்வாய்கள், அதிக அளவு தண்ணீர் வெளியேறிய படி உள்ளன. சில இடங்களில் வேகமாகப் பாயும் தண்ணீரினால் வெள்ளம் கரை புரளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததில், குலசேகரம் அருகேயுள்ள கல்லடிமாமூடு பகுதியிலுள்ள கூலித் தொழிலாளியின் வீட்டின் பின் பக்கச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.