கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு லூர்தம்மாள் சைமன் பிறந்தார். மார்ஷல் நேசமணியுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடியவர்களில் லூர்தம்மாள் சைமனும் ஒருவர். இவர் 1957-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், குளச்சல் தொகுதியில் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அரசில் லூர்தம்மாள் சைமன் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் கடந்த 4.5.2002 அன்று தன்னுடைய 90 வயதில் காலமானார்.
இந்நிலையில், அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டம் மனக்குடியில் அப்பகுதி மக்கள் அனுசரித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தாண்டு நேற்று அவரது 17-ம் நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் வசந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் லூர்தம்மாள் சைமன் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.