கரோனா தொற்று பரவலால் கடைப்பிடிக்கப்படும் பொதுமுடக்கத்தால் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கரோனா தொற்றை விட நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலைதான் எங்களை அச்சுறுத்துகிறது என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கரோனா காலத்தில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், நேற்று (ஜூலை 14) சாலை வரியை ரத்து செய்யக் கோரி மாநிலம் தழுவிய கவன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்: சாலை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையரிடம் மனு அளித்தனர். அதில், சாலை வரி ரத்து, மாத தவணை கடன் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம், இ-பாஸ் முறையை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கன்னியாகுமரி: அனைத்து மோட்டார் சங்கங்கள் சார்பில், கார், வேன் வாகன ஓட்டுநர்களுக்கு ஊரடங்கு காலங்களில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்: இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பேரிடர் இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
திருவண்ணாமலை: தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் கிருஷ்ணகிரி பயணம் - அறிவிப்பே இல்லாமல் சாலையோர கடைகள் இடிப்பு