கன்னியாகுமரி மாவட்டத்தில், பல இடங்களில் மறைமுக குடோன்களில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி மொத்த வியாபாரிகள் விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த மறைமுக குடோன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களாக தீவிர சோதனை நடத்திவந்தனர்.
இதன் முதல்கட்டமாக இந்துக் கல்லூரி அருகில் செயல்பட்ட குடோன் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், சரக்கல்விளை, வட்டவிளை ஆகிய பகுதிகளில் செயல்பட்ட ரகசிய குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருந்தபோதிலும், தங்கு தடையின்றி குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனையாகிக் கொண்டிருந்ததன. அதன்பின்னர் நடத்திய அதிரடி சோதனையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியிலுள்ள மளிகைக் கடையின் வெங்காய குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை மாவட்ட எஸ்பி ஜவகர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் கைப்பற்றினர்.
பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மானோஜ்(36), சுரேஷ் குமார்(42) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் மதுபான விற்பனை எவ்வளவு?