உலகப் பிரசித்திப்பெற்றதும், அத்திவரதர் வீற்றிருக்கும் திருத்தலமுமான காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலின் வைகாசி மாத பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று உற்சவர் வரதராஜப்பெருமாள் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.
அதன் பின் வீதி உலா புறப்பட்ட போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி வடகலை, தென்கலைப் பிரிவினர் பாசுரங்களை பாடுவதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி முதலில் தென்கலைப் பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளைப் பாடினர். பின்னர் வடகலைப் பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளைப் பாடினர்.
பின்னர் இரு அணியும் பிரபந்தங்களை சேர்ந்து பாட முற்படும்போது, திவ்ய பிரபந்தத்தின் பல்லாண்டு பாடல்களை நாங்கள்தான் பாடுவோம் என தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர்.இரண்டு பிரிவினரும் சேர்ந்து திவ்யபிரபந்தப் பாடலை பாடவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொள்ளாமல் திவ்யபிரபந்த பாடல்கள் பாடுவதை தென்கலைப் பிரிவினர் புறக்கணித்தனர்.
இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த காவல் துறையினரும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. முன்னதாக தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிகளை வாழ்த்தியும் வடகலைப் பிரிவினர் வேதாந்த தேசிகரை வாழ்த்தியும் பாடினர்.
இதனால் யாளி வாகனத்தில் பெருமாள் வீதியுலா செல்வது காலதாமதமானதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யாளி வாகனத்தில் உற்சவர் வரதராஜப்பெருமாள் திரு வீதியுலா வந்தார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள 4000 வீடுகள் 3 மாதத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் த.மோ.அன்பரசன்