காஞ்சிபுரம் மாவட்டம் காவன்தண்டலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அவை மோசமான நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கூறி வந்தனர்.
ஆனால் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது, வகுப்பறையின் மேற்கூரை, அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியுடன் சேர்ந்து பெயர்ந்து விழுந்தது. இதில் தரையில் இருந்த மேஜை நொறுங்கியது. இச்சம்பவத்தின் போது மதிய உணவு இடைவேளையில் நடைபெற்றதால் அந்த வகுப்பில் பயின்ற குழந்தைகள் உயிர் தப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.