தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியே சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாள்களில் பொதுமக்கள் உணவில் அதிகம் பயன்படுத்தும் இறைச்சி கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், இறைச்சி வியாபாரிகள் தங்களது வீடுகளில் இறைச்சிகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் மீன், ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை வாங்குவதற்கு, ஞாயிற்றுக்கிழமையான இன்று(ஜூன்.6) திரண்டனர். ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி, ஏராளமானோர் திரண்டது குறித்து தகவலறிந்த சிவகாஞ்சி காவல்துறையினர், இறைச்சி வாங்க வந்த அசைவப் பிரியர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இறைச்சி வாங்குவதற்கு வந்தவர்களில், 50க்கும் மேற்பட்டோரின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அனுமதியின்றி இறைச்சிகளை விற்பனை செய்த வியாபாரிகளையும் கடுமையாக காவல்துறையினர் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தர்மபுரி ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!