காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயராமன் (58). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி பத்மாவதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 4) நள்ளிரவு எச்சூர் ஏரிக்கு அருகாமையில் ஜெயராமன் சுயநினைவின்றி உடலில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக, மனைவி பத்மாவதிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உறவினர்களுடன் சென்ற பத்மாவதி சுயநினைவின்றி மயங்கி கிடந்த ஜெயராமனை மீட்டு சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஜெயராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
ஜெயராமனின் உடலில் காயம் இருப்பதால் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், சுங்குவார்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து காவல்துறையினர் ஜெயராமனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழில் போட்டி காரணமாக ஜெயராமன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா, இல்லை குடும்ப பிரச்னை காரணமாக என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.