சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழுவினர் இன்று (டிசம்பர் 10) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வுமேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தணிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை செய்தியாளரிடம் பேசுகையில், “கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழுவினர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆய்வுமேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை இருக்கிறது. சில இடங்களில் பொதுமக்கள் வேதனையில் இருக்கிறார்கள். மாசு பிரச்சினை குறித்து ஆராய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் பொதுக்கணக்குக் குழுவில் அறிக்கைத் தாக்கல்செய்யும்” என்றார்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வீடியோ எடுத்தவர்களின் பரபரப்பு பேட்டி