கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பழைய எடையாளம் ஆற்றில் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் பெயர் பாண்டியன் என்பதும், தான் அரசு தூய்மைப் பணியாளரின் மகனென கூறி மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஊரடங்கு காரணமாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்தச் சூழலில் இதனை சாதகமாக பயன்படுத்திய பாண்டியன் ஆற்றில் இரண்டு வாரங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு ஒரு மாட்டு வண்டிக்கு ரூபாய் 2500 முதல் 3000 வரை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் பார்க்க: அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு: கேரள அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!