காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் அருண் பிரசாத் என்பவரது வீட்டில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி (21) என்ற பெண் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதே மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணும் இவருடன் தங்கி வேலை பார்த்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை ஆறு மணி அளவில் ரஞ்சிதா வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கரீனா பிரியதர்ஷினி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் ரஞ்சிதா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கரீனா பிரியதர்ஷினி போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கிய நிலையில் இருந்துள்ளார்.
ரஞ்சிதா அவரை தட்டி எழுப்பியபோது பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்ததில் கரீனா பிரியதர்ஷினி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கரீனா பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூறாய்வில் கரீனா பிரியதர்ஷினி கன்னத்தில் கீறல், கழுத்துப் பகுதியில் நக கீறல்கள் பதிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்!