காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் மாமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற, அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் இடையே போட்டாபோட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வேதாசலம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், 44ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குச் சுயேச்சையாகத் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்பகுதியைச் சேர்ந்த துடிப்புமிக்க இளைஞர்களில் ஒருவரான சிவசண்முகம் போட்டியிடுவதால் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் மத்தியில் சிவசண்முகத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சிகளைப் போல ஏராளமான ஆதரவாளர்களைத் திரட்டி, வாகனங்கள் வைத்தும், பேண்டு வாத்தியம் வைத்தும் ஊர்வலமாகப் படைச் சூழ சென்று உடன் வருபவர்களுக்குத் தினந்தோறும் சில பல லட்சங்களைச் செலவழித்து , பிரியாணி போட்டு பந்தாக்காட்டி வாக்கு சேகரிப்பதைத் தவிர்த்துள்ளார்.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியாகத் தேர்தல் பரப்புரை!
தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தனியொரு ஆளாக தன்னந்தனியாகத் தான் போட்டியிடும் 44ஆவது வார்டுக்குள்பட்ட எல்லப்பன் நகர், நேரு நகர், காந்தி நகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்தே வீடு வீடாகச் சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் தான் செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி, வீடுதோறும் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருவது அரசியல் கட்சியினருக்கு ஓர் முன் உதாரணமாக அமைந்துள்ளது.
தேர்தல் என்றாலே கூட்டமாகச் சென்று வாக்கு கேட்க வேண்டும் என்று ஓர் மரபாக அனைத்து அரசியல் கட்சியினரும் பின்பற்றிவரும் நிலையில் தற்போது உள்ள கரோனா பரவல் சூழலில் தனியொரு ஆளாகச் சுயேச்சை வேட்பாளர் சிவசண்முகத்தின் தேர்தல் பரப்புரை வியூகம் அப்பகுதி பொதுமக்களிடையே மட்டுமல்லாமல் அனைவரது இடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை- ஓபிஎஸ்