மாநிலத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் நுழைவுவாயிலில் இன்று (மார்ச் 5) அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோவில் கொண்டு வந்த 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அதேபோல், காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் வட்டாட்சியர் ரமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 4 லட்சத்து 400 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, வட்டாட்சியர் அகிலா தேவி தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர்
மேற்கொண்ட சோதனையில், கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரினை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 3 லட்சத்து 77 ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (மார்ச் 5) அதிகாலையிலிருந்து நடைபெற்று வரும் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை
12 லட்சத்து 12 ஆயிரத்து ஐநூறு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகா மாநிலத்திலிருந்து பட்டுச்சேலை எடுக்க அதிக அளவில், காஞ்சிபுரம் வருகை தரும் நபர்கள் போதிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுச்சேலை கடை உரிமையாளர்கள் பணம் கொண்டு வந்து பொருட்களை கொள்முதல் செய்யும் நபர்களுக்கு அதிக அளவில் தள்ளுபடி வழங்குவதால், மின்னணு பணப் பரிமாற்றம், ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்துவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க...ரமலான் நாளில் சிபிஎஸ்இ தேர்வு: தேதிகளை மாற்ற மத்திய அரசு பரிசீலனை