உலக பிரசித்தி பெற்றதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அதையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளைகளில் ஏகாம்பரநாதர் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்துவருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச் 24) இரவு பிரபல உற்சவமான வெள்ளி தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்வேறு மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் உற்சவர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க நான்கு ராஜ வீதிகளில் எழுந்தருளி திரு வீதி உலா பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
இவ்விழாவினை காண காஞ்சிபுரம், சுற்றுவட்டார பொதுமக்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வெள்ளித் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளித் தேர் உறசவத்தையொட்டி கச்சபேஸ்வரர் கோயில் முன்பு வெள்ளித் தேர் வந்தபோது அங்கு நடைபெற்ற சிறப்பு வாணவேடிக்கையால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது.
மேலும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் என். தியாகராஜன் வெகு சிறப்பாக செய்திருந்தார்.
இதையும் படிங்க: குமரியில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும்!