காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடு முழுவதும் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டிலும் இந்தப் பணியை கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 13 வட்டாரங்களிலுள்ள 633 கிராம ஊராட்சிகளிலும், நகர்புறத்தில் பிரிக்கப்பட்ட 242 அலகுகளிலும் கணக்கெடுப்பு பணி நடந்துவருகிறது. வணிக நிறுவனங்களில் உற்பத்தி விநியோகம், விற்பனை சேவை குறித்தும், பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத வணிக நிறுவனங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கணக்கெடுப்புப் பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, கைபேசி எண், செய்யும் தொழில், சுய தொழில் முதலீடுகள், வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, வருமான வரித்துறை பதிவு எண், சரக்கு மற்றும் சேவை வரி பதிவு எண் கொண்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
இக்கணக்கெடுப்பினால் கிடைக்கும் விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படும். கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம், தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பார்வையின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.
எனவே கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சி, மாவட்ட வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட மக்களை கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒரு கோடியைத் தாண்டிய கோவிட்-19: பொருளாதாரத்தின் நிலை ஒரு பார்வை