காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கன் (38). இவரது மனைவி பழனியம்மாள் (33). கொஞ்சி அடைக்கன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி பணிக்கு சென்ற கொஞ்சி அடைக்கன் வீடு திரும்பவில்லை.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி பழனியம்மாள் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், கொஞ்சி அடைக்கன் தனது அண்ணன் மனைவியான சித்ரா (47) என்பவருடன் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சித்ராவை கடந்த 6 ஆம் தேதி காவலர்கள் விசாரித்தனர்.
அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் கொஞ்சி அடைக்கனுக்கு சொந்தமான வீட்டில் சித்ராவும், அவரது கணவரான கொஞ்சி அடைக்கனும், மைத்துனர் கொஞ்சி அடைக்கனும் (இருவருக்கும் ஒரே பெயர்) வசித்து வந்துள்ளனர்.
மைத்துனர் கொஞ்சி அடைக்கனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், அவருக்கும் அவரது அண்ணி சித்ராவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சித்ராவிற்கு வேறு ஒரு நபருடன் உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மைத்துனர் கொஞ்சி அடைக்கன் காஞ்சிபுரத்தில் குடிப் பெயர்ந்து, பின்னர் பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் வீட்டை விற்பனை செய்வதற்காக அங்கு தங்கியிருந்த அவரது அண்ணி சித்ராவை காலி செய்யவும், அவரிடம் கொடுத்த பணம் உள்ளிட்டவற்றை கேட்டு கொஞ்சி அடைக்கன் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சித்ரா ஒன்றரை கோடி மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு கிடைக்க வேண்டும் என ஏழுமலை, ரஞ்சித் ஆகியோருடன் கொஞ்சி அடைக்கனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி டார்ஜன்குமார் கூட்டாளிகளான விவேக் (எ) விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன், சங்கரநாராயணன் ஆகியோர் மூலமாக கொஞ்சி அடைக்கனை காரில் அழைத்துச் சென்று சீட் பெல்ட்டால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது கை கால்களை கட்டி, இரும்பு பேரல் உள்ளே அடைத்து அதற்கு மேல் ஜல்லியை கொட்டி காங்கீரிட் நிரப்பி இரும்பு பேரலுடன், மலைப்பட்டு கிராமத்திலுள்ள சுதர்சன் ரெட்டி என்பவரது கிணற்றில் போட்டு மறைத்ததும், கூலிப்படைக்கு சித்ரா ரூபாய் 5 லட்சம் வழங்கியதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, துணைகாவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றிலிருந்து இரும்பு பேரலை மீட்டு, அதிலிருந்து கொஞ்சி அடைக்கனின் உடலை வெளியே எடுத்து உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இவ்வழக்கில், சித்ரா உள்பட 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்திற்காக அண்ணியே மைத்துனரை கூலிப்படை வைத்து கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட தருமபுரி வாசி கைது!