ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளத்தூர் கிராம மக்கள் நியாய விலைக்கடைக்கு செல்ல இரண்டு கிலேமீட்டர் தூரத்திற்கும் மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், நியாயவிலைக்கடை அமைக்கவேண்டும் என்றும், குண்டேரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும் என்றும், இக்கிராமத்திற்கு பொதுக்கழிப்பறை மற்றும் சாக்கடை குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்று பல வருடமாக மாவட்ட நிர்வாகத்தினரிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பள்ளத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி வாணிப்புத்தூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல்துறையினர் மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்க மறுத்த பள்ளத்தூர் கிராமமக்கள் அங்கிருந்து புறப்பட்டு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்களாபுதூர் பகுதிக்கு சென்று அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகன் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.