ஈரோடு: கவுந்தபாடி அருகே நான்கு ஆண்டுகளாக ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வந்த இரண்டு இளைஞர்களை இரவு முழுக்க காவல் காத்து, அவர்களை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகேயுள்ள கடுக்காம்பாளையம், பொலவக்காளிபாளையம், வெங்கமேடு, கோரக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீடுகளில் வளர்த்து வரும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் இரவு நேரங்களில் திருடப்பட்டு வந்தது.
இந்த ஆடு மற்றும் கோழிகளை திருட வரும் கும்பல், வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு பின் திருடிச் செல்வது, ஆடுகளை விவசாய நிலங்களிலேயே கழுத்தை அறுத்து எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கடுக்காம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டில் ஒரு பெண் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்ற இரண்டு திருடர்கள், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, அங்கு இருந்த 15க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை திருடி, துணியில் வைத்து மறைத்து திருட முயன்றுள்ளனர்.
அப்போது கோழிகளின் சத்தம் கேட்டு பெண் வெளியே வர முயன்றபோது, கதவு பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர், இது குறித்து அருகில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கிராம மக்கள், பெண்ணின் வீட்டிற்கு வந்தபோது, கோழிகளை திருடிக் கொண்டு இருந்த இருவரும், திருடிய கோழிகளை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி, அருகில் இருந்த விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பினர்.
இரவு நேரமென்பதால் அவர்களை பிடிக்க முடியவில்லை, கொள்ளையர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க, கரும்புக் காட்டை சுற்றிலும் விடிய விடிய கிராம மக்கள் காவல் இருந்தனர். அதைத் தொடர்ந்து காலையில், காட்டை விட்டு வெளியே வந்த திருடர்கள், ஆளுக்கொருபுறம் தப்பியோடவே, ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
நான்கு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடு, கோழிகளை இழந்த கிராம மக்கள் ஆத்திரத்தில் பிளாஸ்டிக் பைப், மூங்கில் தடி என கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக இருவரையும் தாக்கி உள்ளனர். மேலும், எந்தெந்த வீட்டில் ஆடு, கோழி உள்ளது என தகவல் தெரிவிக்கும் கூட்டாளிகள், யார் என கேட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.
கிராம மக்களின் தாக்குதலால் படுகாயமடைந்த திருடர்கள், அங்கேயே சுருண்டு விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று கோழி திருடி கிராம மக்களிடம் பிடிபட்ட கோபி பகுதி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரையும் மீட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருந்ததால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு!