ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு தினந்தோறும் காலை, மாலை என இருமுறை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் கடம்பூரில் இருந்து அருகியம், மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் இருசக்கர வாகனம் மூலம் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு நேற்று (மே.1) இருசக்கர வாகனத்தில் மக்கள் சென்றுள்ளனர். அருகியம் என்ற வனச்சாலையில் சாலையோரம் மறைந்திருந்த யானை திடீரென அவர்களை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் வந்த வழியிலேயே திரும்பினர்.
யானை தொடர்ந்து துரத்தியதால் டெம்போவில் ஏறி அவர்கள் தப்பினர். ஆனால் யானை அதே இடத்தில் அங்கும் இங்குமாக உலாவியதால் சாலையை கடந்து செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் 1 மணி நேரம் வனச்சாலையில் காத்திருந்தனர்.
நீண்ட நேரத்துக்குப்பின் யானை வன ஓடை வழியாக காட்டுக்குள் சென்றதால் மக்கள் நிம்மதியடைந்தனர். அதன் பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மாக்கம்பாளையம் புறப்பட்டனர்.
மாக்கம்பாளையம் சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Video: 'எனக்கும் பசிக்குமில்ல'...மளிகை கடை ஷட்டரை உடைத்து உணவு தேடிய யானைகள்!