திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகச் சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டின் கடைசி நாளான நேற்று (டிசம்பர் 31) திருப்புகழ் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, அதிகாலை மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டுத் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் அருகில் முதல் திருப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் பஜனைக் குழுவினர் முன்னிலையில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் திருப்புகழ் திருப்படி திருவிழாவைத் தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலர்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
அதே நேரத்தில் பஜனைக் குழுவினர் திருமுருகன் பக்தி பாடல் இசைத்துக் கொண்டு மலைக் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பெண்கள் படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கற்பூரம் ஏற்றிவைத்து தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி முருகப்பெருமானைத் தரிசித்துவருகின்றனர்.
நேற்று காலை 11 மணிக்கு உற்சவர் தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோயில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சித் தந்தார். புத்தாண்டையொட்டி இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.
மேலும், நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம்செய்ய அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
இதனிடையே, பக்தர்கள் முகக் கவசம் அணிந்துகொண்டும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் சாமி தரிசனம்செய்ய வேண்டும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஜனவரி 1 புத்தாண்டு ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?!