கரோனா பாதிப்பு காரணமாக, மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி முதல் தேசிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 43 நாள்களாக மாநிலங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நோய்த் தொற்று பாதிப்புக்கு முன்பாக தமிழ்நாடு வந்த மைசூர் வாழ் தமிழர்கள், மீண்டும் சொந்த ஊரான மைசூர், சாம்ராஜ் நகர், குண்டல்பேட் திரும்ப விரும்பினர்.
கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசிடம் இ-பாஸ் பெற்று, கர்நாடகாவிற்குச் செல்ல பண்ணாரி சோதனைச்சாவடி வந்தனர். சோதனைச் சாவடி முகாமில், மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் கர்நாடக தமிழர்களுக்கு கர்நாடகா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உரிய அனுமதிச் சீட்டைக் காண்பித்தும் கர்நாடக காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்துடன் சோதனைச்சாவடியில் செய்வதறியாது தவித்தனர். மேலும், பல மணிநேரமாக தங்களைக் காக்க வைத்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கர்நாடக வாழ் தமிழர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'மதுபான விலையேற்றத்தை விமர்சனம் செய்ய முடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு