இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், அபேய் தியோல், இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ள ஹீரோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் திரைப்படம் வெளிவரும் நாளில் அவர்களது ரசிகர்கள் படத்தின் நாயகனுக்காக கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட அலப்பறைகளை செய்வார்கள்.
ஆனால், அந்த வழக்கத்தை மாற்றும் நோக்கில் அந்த பார்முலாவை மாற்றியமைத்துள்ளனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள், கோயம்புத்தூர் பிரிவில் செயல்பட்டு வரும் மனசாந்தி இல்லத்தில், தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் ஆதரவற்று இருக்கும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கினர்.
அதுமட்டுமில்லாமல் இல்ல வளாகத்தில் குழந்தைகளுடன் மரக்கன்று நட்டு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் இரு திரையங்குகளில் வெளியாகும் ஹீரோ திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் விதைப்பந்துகள் கொடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையம் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் இந்த செயல்பாடுகளை திரைப்பட ரசிகர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டிவருகின்றனர். ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போது அதில் நடித்த நடிகருக்கு ரசிகர்கள் லட்சக்கணத்தில் செலவு செய்து கட்டவுட் பேனர் ஊர்வலம் என வெட்டியாக செலவு செய்வதைவிட இதுபோல் பயனுள்ள வகையில் செலவு செய்தால் மற்றவர்களையும் பொதுமக்கள் பாராட்டுவார்கள்.
கதாநாயகர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் பாய்ச்சிய ரசிகர்கள், இன்று மக்களின் மனதில் ரியல் ஹீரோவாக மாறியிருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.
இதையும் படிங்க: TENET - கிறிஸ்டோபர் நோலனின் சயின்ஸ் ஃபிக்சன்